உள்ளூர் செய்திகள்
கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்றார்- தாய்ப் பாசத்தால் வீடு திரும்பிய அரசு பள்ளி மாணவர்
குமாரபாளையம் அருகே கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்ற மாணவர் தாய்ப் பாசத்தால் வீடு திரும்பினார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவரின் குடும்பத்தார் குமார–பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாணவர் நேற்று வீடு திரும்பினார்.இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், வீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய மாணவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றியுள்ளார்.
அப்போது தனது வீட்டின் அருகில் உள்ள தன் நண்பனுக்கு போன் செய்து, அம்மா எப்படி இருக்கிறார்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நண்பர், உன் நினைவால் சாப்பிடாமல் அழுதபடி உள்ளார், என கூறியுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட மாணவன் தாய்ப் பாசத்தால் வீடு திரும்பினார் என்றார். இதனிடையே 2 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய மாணவரை அவரது தாய் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் பெருக வரவேற்றார். இது அப்பகுதியினரை நெகிழச்செய்தது.