உள்ளூர் செய்திகள்
மாணவர்கள்

தேர்வு பயத்தால் உயிரை மாய்க்கும் மாணவர்கள்

Published On 2022-05-22 08:21 GMT   |   Update On 2022-05-22 08:21 GMT
தேர்வு பயத்தால் உயிரை மாய்க்கும் மாணவர்கள் அச்சத்தை அகற்ற கவுன்சிலிங் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை

தமிழகத்தில் தேர்வு காலங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு தோல்வி அச்சத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் கணிதத் தேர்வை சரியாக எழுதவில்லை  என்பதால் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று கருதிய மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.  

இது அவரது பெற்றோரையும், சக மாணவ -மாணவிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு காலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் படிக்கவில்லை என்றால் எந்த வேலையும் கிடைக்காது என்று தவறாகக் கருதுவதுதான். தற்கொலை முடிவெடுக்கும் மாணவர்கள் பலர் இங்கு படிக்காமல்  சாதனைகள் படைக்கும் இளைஞர்கள் பலர் நம்மிடையே இருப்பதை கவனிக்க தவறிவிடுகின்றனர்.

கல்வி என்பது ஒரு வழிகாட்டுதல் தான். அந்தவழியில் செல்ல முடியவில்லை என்றால் இன்னும் பல வழிகள் உள்ளன.ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டால் போதும் பணம் ஈட்டி கவலையின்றி வாழ முடியும். படிக்காத பலர் உழைப்பால் முன்னேறி பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றனர்.

எனவே எவ்வளவு முயற்சி எடுத்தாலும் படிப்பு வராத மாணவ-மாணவிகளுக்கு   எந்த தொழில் மீது ஆர்வம் உள்ளதோ அந்த தொழில்  சம்மந்தமாக கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்கள் சுயமாக சம்பாதிக்க ஊக்கம் பெறுவார்கள். 

மேலும், பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் எந்த பாடத்தில் மதிப்பெண் எடுக்க முடியாமல் திணறுகின்றனர் என்பதை ஆசிரியர்கள் மூலம் தெரிந்த கொண்டு அந்த பாடங்களில் உரிய பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களது தேர்வு அச்சத்தை போக்கலாம். 
Tags:    

Similar News