search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலிங்"

    • பொது கவுன்சிலிங் முறைக்கு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, தர வரிசை பட்டியலுக்கு தயார் செய்துள்ளோம்.
    • இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நிறைவு செய்து வகுப்புகள் துவங்கப்படும்.

    திருப்பூர்,ஜூலை.17-

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கவுன்சிலிங், இன்று மற்றும் நாளை 18-ந்தேதி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து வகுப்புகள் துவக்கப்படும் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு வேளாண் மை பல்கலையில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது. 4,000ம் இடங்களுக்கு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பெரும்பாலான இடங்கள் பொது கவுன்சிலிங் முறையில் சேர்க்கப்படுகின்றன. சிறப்பு ஒதுக்கீட்டின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இப்பிரிவில் 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு துறைக்கான முன்னுரிமை இடங்கள் 20 உள்ளன.

    இவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்க தயார் நிலையில் உள்ளோம். முன்னாள் ராணுவத்தினருக்கான முன்னுரிமை அடிப்படையில் 20 இடங்கள் நிரப்ப தயாராக உள்ளோம்.

    பொது கவுன்சிலிங் முறைக்கு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, தர வரிசை பட்டியலுக்கு தயார் செய்துள்ளோம். 200க்கு 200 மதிப்பெண் பெற்ற 3 பேர், வேளாண் படிப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். 199.5 மதிப்பெண் பெற்ற 17 பேர் வேளாண் படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

    199 மதிப்பெண் பெற்றவர்கள், 60 - -70 பேர் உள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு முறையிலும் சேர்க்கை நடக்கும்.தொழில்கல்வி படித்த மாணவர்களுக்கு 240 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலும் தயாராகியுள்ளது.

    பொது கவுன்சிலிங் இன்று மற்றும் நாளை ஆன்லைன் முறையில் நடக்கிறது. விருப்பத்தின் அடிப்படையில் முதலாவது சுற்று இட ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றம் செய்யவும், இந்த இருநாட்களில் வாய்ப்பளிக்கப்படும். 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இது முடிந்தவுடன், உடனடியாக பணம் செலுத்தி வகுப்புகளில் சேரலாம்.

    விருப்பத்தின் பேரில் காத்திருப்பின்படி தகுதியுள்ள கல்லூரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். இது இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முறையில் தேர்வு செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நிறைவு செய்து வகுப்புகள் துவங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஜூன் 8 மற்றும் 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஜூன், 8 மற்றும், 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இக்கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, முதல் கட்ட கவுன்சிலிங் மே, 31ல் துவங்கி, நேற்று (ஜூன், 6) வரை நடந்தது. மொத்தமுள்ள, 835 இடங்களுக்கு, 8,190 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நாளை (8ம் தேதி) மற்றும், 9ம் தேதி இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. வணிகவியல் பாடங்களான பி.காம்., பி.காம்., சி.ஏ., படிப்புக்கு ஜூன், 8ம் தேதி காலை, 9:30 க்கும், பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., படிப்புகளுக்கு காலை, 11:30 மணிக்கும், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கும். வரும், 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு இயற்பியல் பாடப்பிரிவு கவுன்சிலிங் நடக்கிறது. வேதியியல், விலங்கியல் பாடங்களுக்கு காலை, 11:30 மணிக்கும், கணிதம், கணிணி அறிவியல், கணிணி பயன்பாடு, ஆடைவடிவமைப்பு நாகரீகம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் பாடங்களுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டில் www.cgac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்க கல்லுாரிக்கு வருவோர் கட்டாயம் பெற்றோர் உடன் வருதல் வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழின் இரண்டு நகல், அசல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

    உரிய நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்பது அவசியம். தாமதமாக வந்தால், அந்த நேரத்தில் பாடப்பிரிவுகளில் இருக்கும் இடங்கள் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    புதிய கல்வியாண்டு (2023 - 2024) துவங்க இன்னமும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், கவுன்சிலிங் மூலம் ஆசிரியர் பணியிட மாற்ற பணி துவங்கி நடந்து வருகிறது. மாவட்டத்துக்குள் மாறுதல் நிறைவடைந்த நிலையில், கடந்த 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட கவுன்சிலிங் நடக்கிறது.9 தாலுகாவில் பாட வாரியாக 800 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் கவுன்சிலிங், இடமாற்ற விபரங்களை அப்டேட் செய்யும் எமிஸ் இணையதள வேகம் குறைவாக உள்ளது. காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- கலை, அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கு 17க்கும் அதிகமான பாடங்கள் உள்ளது. 867 ஆசிரியர்கள் இடமாறுதல் ஒப்புதல் வழங்க வேண்டும். கவுன்சிலிங் துவங்கிய நாள் முதல்3 நாட்களில் 200க்கும் குறைவானவர்களுக்கு ஒப்புதல் கிடைக்க பெற்றுள்ளது. இப்படியே சென்றால் கல்வியாண்டு துவங்கும் வரை கவுன்சிலிங் நடத்த வேண்டி இருக்கும். சர்வர் பிரச்னைகளை கலைந்து கவுன்சிலிங் வேகப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கவுன்சிலிங் இணையதளம் வேகம் குறைவாக உள்ளது குறித்து தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மூலம் சென்னைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மாநிலம் முழுவதும் இதே நிலை இருப்பதாக பதிலளித்தனர். சர்வர் வேகத்தை அதிகரிக்க, சீராக இயக்க தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்றனர்.

    • அரசு பள்ளிகளில் படித்து ‘நீட்’ தேர்வு எழுதி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
    • விவசாய கூலித் தொழிலாளின் மகன் கார்த்திகேயன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.

    சென்னை:

    பிள்ளைக்கு டாக்டர் சீட் வாங்க போறோம்... என்று ஊரில் இருந்து கிளம்புபவர்கள். கார் அல்லது ரெயிலில் பயணித்து சென்னையில் நல்ல ஓட்டலாக பார்த்து ரூம் போட்டு குளித்து மாற்று உடை உடுத்திக் கொண்டு பிரஷ்ஷாகி அட்மிஷன் வாங்க புறப்படுவார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம் கார்களால் நிரம்பி இருக்கும். இடமில்லாமல் ரோட்டிலும் கார்கள் அணிவகுத்து நிற்கும்.

    கோட்-சூட் அணிந்தும், விலை உயர்ந்த புடவையிலும் பெற்றோருடன் பிள்ளைகள் வந்து குவிந்து இருப்பார்கள். அவர்களின் மிடுக்கான தோற்றமே டாக்டர், என்ஜினீயர், தொழில் அதிபர், வசதி படைத்த குடும்பத்தினர் என்பதை வெளிப்படுத்தும். இதைத்தான் கீழ்ப்பாக்கம் வளாகம் பார்த்து இருக்கிறது.

    ஆனால் இன்று புதுமையானவர்களை-உண்மையான உழைப்பாளிகளை அந்த வளாகம் விசித்திரமாக பார்த்தது.

    ஊரில் நாள் முழுவதும் சகதி நிறைந்த கந்தல் ஆடையுடன் விவசாய நிலத்தில் பாடுபடும் விவசாயிகள், கல், மண் சுமக்கும் தொழிலாளர்கள், இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு தறிக் குழிக்குள் நின்று துணி நெய்யும் நெசவாளிகள், இவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வு எழுதி அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.


    மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த நெசவு தொழிலாளி மகள் சங்கீதா

    மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த நெசவு தொழிலாளி மகள் சங்கீதா

    கிராமங்களில் இருந்து தாய்-தந்தையுடன் பஸ்சில் கோயம்பேடு வந்து இறங்கி அங்கிருந்து டவுன் பஸ்சை பிடித்து வந்திருந்தார்கள். கைகளில் சிறிய பை. கசங்கிய வேட்டி-சட்டையில் தந்தை, கசங்கிப்போன பழைய சேலையில் தாய், சாதாரண பேன்ட் சட்டையில் மகன், பொதுக்குழாயில் பல் துலக்கி முகத்தை கழுவி விட்டு கையேந்தி பவனில் ஒன்றிரண்டு இட்லியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு மர நிழல்களில் அமர்ந்திருந்தார்கள்.

    சென்னையின் கம்பீரம் அவர்களின் கண்களை கவர்ந்தது. நாகரீகம் அவர்களை ஆச்சரிய மூட்டியது.

    பார் பார் பட்டணம் பார் என்று ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இனி இந்த மாதிரி பட்டணத்தில் தான் நம் பிள்ளையும் படிக்கப்போகிறான் என்ற சந்தோசம் அவர்களின் முகங்களில் தெரிந்தது.

    கவுன்சிலிங் முறை வந்து மகனை உள்ளே அழைத்ததும் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் உடன் சென்றார்கள்.

    அங்கு மாணவனை அமர வைத்து கம்ப்யூட்டர் திரையில் கல்லூரிகளின் விபரத்தை காட்டினார்கள். ஆனால் எதுவும் தெரியாமல் பார்த்து கொண்டிருந்த தந்தையிடம் மருத்துவ துறை பணியாளர்கள் அய்யா, உங்கள் பகுதியில் இன்னென்ன கல்லூரிகளில் இடம் உள்ளது. எந்த கல்லூரி வேண்டும் என்று கேட்டனர்.

    அதைகேட்ட பெற்றோர் தங்கள் மகனிடம் 'அய்யா உனக்கு எந்த காலேஜ் புடிக்குதோ அதை எடுய்யா' என்றனர்.

    அத்துடன் அந்த ஊழியர்களிடம் "நல்ல காலேஜா பார்த்து குடுங்கய்யா" என்றும் கேட்டுக் கொண்டனர். இதுதான் ஒரு கிராமத்து தொழிலாளி வீட்டு டாக்டர் கனவு பலித்த காட்சி.

    அரியலூரை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் பழனியாண்டி-மகேஸ்வரி தம்பதியின் மகன் கார்த்திகேயன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.

    மகனுக்கு டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்து விட்டது என்றதும் அந்த ஏழைத்தாய் இரு கைகளையும் கூப்பிய படியே 'சாமி, என் புள்ளக்கி நல்ல வழி காட்டிவிட்டாய்' என்று கூறியதும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

    என் மகனும் டாக்டருக்கு படிப்பான் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. ஒதுக்கீட்டில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னான். அப்படியே நடந்து விட்டது என்றார்.

    மேலும் கார்த்திகேயனின் கன்னங்களை தடவியபடியே 'நல்லா படிக்கணும்யா. நீ டாக்டர் ஆகி என்னைப் போல் 60 வயதை கடந்த ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கணும்யா' என்றார்.

    அந்த ஏழைத்தாயின் விருப்பத்தை கேட்டதும் அங்கு நின்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

    அந்தியூரை சேர்ந்த நெசவுத்தொழிலாளியின் மகளான சங்கீதா கூறும்போது, "என் அம்மா-அப்பாவுக்கு நான் டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனாலும் நீட் தேர்வில் சாதிக்க முடியுமா என்று பயமாக இருந்தது. இப்போது அரசின் ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததால் எங்கள் குடும்பமே கர்வம் கொள்கிறது" என்றார்.

    • மன தைரியத்தை தர வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
    • திருப்பூரில் 464 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் நீட் தேர்வெழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இது குறித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது:-

    அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி 'நீட்' ஒருங்கிணைப்பாளர்களுக்கும், பாட கருத்தாளர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளோம். அன்பான முறையில் வாழ்த்து சொல்லி, மனநிலையை அறிந்து உரிய ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு தேர்வு குறித்த அழுத்தம் தராமல் மன தைரியத்தை தர வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

    மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு குறித்த சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். மன அழுத்தத்திற்கு ஆளாகும் முன் அவர்களை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.திருப்பூரில் 464 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனில் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்க வேண்டும். மன அழுத்தத்தை போக்க தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது.
    • அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

    ஈரோடு:

    தமிழக பள்ளி கல்வித்துறையில் ஏற்கனவே நடந்த இடமாறுதல் கவுன்சி லிங்கில் விடுபட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் இன்றும், நாளையும் நடக்கிறது.

    ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அதன்படி இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வை யிட்டார்.

    இதைத் தொடர்ந்து நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிடை மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    தொடர்ந்து 14, 15-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    • கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.
    • முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை:

    வீட்டு கடமையையும் பார்த்துக் கொண்டு போலீஸ் காவல் பணியிலும் இரவு, பகல் பாராது ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் 'ஆனந்தம்' என்றொரு திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இத்திட்டத்தின் நோக்கம் குடும்ப பணிகளிலும், காவல் நிலைய பணிகளிலும் ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வாரத்தில் 3 நாள் கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்தை குறைத்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைப்பது தான்.

    இந்த கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் 4,821 பெண் போலீசார் பங்கேற்றனர். அவர்களுக்கு சுயசிந்தனைக்கான பயிற்சி, எப்போதும் மகிழ்ச்சியாக முற்போக்கு சிந்தனையும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இந்த முகாம் தொடர்ந்து இரண்டு மாதம் நடக்கிறது. முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசுகையில், இங்கு நடைபெறும் இந்த பயிற்சியில் நல்ல ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொண்டு காவல் பணியினையும், குடும்ப பொறுப்பையும் சமநிலையுடன் வைத்து பணியாற்று மன அழுத்தமில்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்ற பெண் போலீசார் கூறும்போது, இந்த கவுன்சிலிங் பெண் போலீசாருக்கு நல்லதொரு பயனுள்ள நிகழ்ச்சியாகும். குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு போலீஸ் பணியினையும் டென்சனில்லாமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று முகாமில் பயிற்சி அளித்தது எங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது என்றனர்.

    2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு அரசு பல்நோக்கு மருத்துவ மனை கூட்டரங்கில் இன்று தொடங்கியது. வருகின்ற 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகின்றன. #TNMedicalCounselling #MBBS #MedicalEducation

    சென்னை:

    அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.இடங்கள் ஆகியவற்றிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது.

    இதில் 3501 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின. அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைப்பெற்றது.

    அரசு மருத்துவ கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பு கூட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் கிடைத்தது.

    இந்த நிலையில் 2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு அரசு பல்நோக்கு மருத்துவ மனை கூட்டரங்கில் இன்று தொடங்கியது. வருகின்ற 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகின்றன.

    அகில இந்திய ஒதுக்கீட்டு சரண்டர் இடங்கள் 98, அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்று சேராத இடங்கள் 30, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 113 என மொத்தம் 241 எம்.பி.பி.எஸ்.இடங்கள் நிரப்பபடுகிறது.

    இது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-

    இரண்டாவது கட்ட கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதனால் 3500 மாணவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு சிலர் கல்லூரிகளை மாற்ற விரும்பினால் இந்த வாய்ப்பின் மூலம் மறு ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர ரேங்க் பட்டியலில் காத்திருப்போருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    திங்கட்கிழமை வரை கலந்தாய்வு நடைபெறும். ஏற்கனவே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர ஒதுக்கீடு பெற்றவர்கள் மறு ஒதுக்கீடு பெறலாம். இது தவிர சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் 27 இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 3-வது கட்ட கலந்தாய்வு தனியார் பல் மருத்துவ இடங்களுக்கு பின்னர் நடத்தப்படும் என்றார்.

    ×