search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women police"

    • சினிமா ஆசை, பெண் இன்ஸ்பெக்டரை சிறையில் தள்ளிவிட்டது.
    • ஸ்வர்ணலதா‘ஏபி 31’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.

    விசாகப்பட்டினம் :

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர்.

    இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 10 சதவீத கமிஷன் அடிப்படையில் மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதற்காக அந்த நோட்டுகளை சூரிபாபு என்ற இடைத்தரகரிடம் கொடுத்தனர்.

    பணத்தை மாற்றிய சூரிபாபு, ரூ.90 லட்ச ரூபாய்க்கு ரூ.500 நோட்டு கட்டுகளை எடுத்துக்கொண்டு விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு ஆந்திர ஆயுதப்படை போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, ஊர்க்காவல் படையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

    சூரிபாபுவின் காரையும் சோதனையிட்ட அவர், அதில் ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டு கட்டுகள் இருப்பதைக் கண்டார். அதுகுறித்து ஸ்வர்ணலதா விசாரித்தபோது, சூரிபாபு திக்கி திணறியுள்ளார்.

    அதையடுத்து ஸ்வர்ணலதா, தனக்கு ரூ.20 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை எடுத்துச் செல்லும்படியும், இல்லாவிட்டால், ஆவணமின்றி கொண்டு செல்வதாக மொத்த பணத்தையும் பறிமுதல் செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது

    பெண் இன்ஸ்பெக்டருடன் பேரம் பேசிய சூரிபாபு, கடைசியில் ரூ.12 லட்சத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதரிடம் கொண்டு போய் கொடுத்துள்ளார்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் விக்ரமாவிடம் புகார் அளித்தனர். அதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, இடைத்தரகர் சூரிபாபு, ஊர்க்காவல் படையினர் இருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, சினிமா மோகத்தில் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர், பிரபலமான தெலுங்கு சினிமா பாடல்களுக்கு நடனமாடி 'யூடியூப்'பில் பதிவேற்றி வந்தார். அவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்நிலையில், ஸ்வர்ணலதாவை சந்தித்த ஒருவர், 'உங்கள் அழகுக்கு நீங்கள் சினிமாவில் நடித்தால் 'ஓகோ' என்று வருவீர்கள்' என்று கூறினாராம்.

    அதையடுத்து சினிமா கனவில் மிதந்த ஸ்வர்ணலதா, அதை தானே நிறைவேற்றும் வகையில் 'ஏபி 31' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அதில் கதாநாயகியாகவும் அவரே நடிக்கிறாராம்.

    சினிமா தயாரிப்புக்கு நிறைய பணம் தேவை என்பதால் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். சினிமா ஆசை, பெண் இன்ஸ்பெக்டரை சிறையில் தள்ளிவிட்டது.

    • ராஜபாளையத்திற்கு முதல் முறையாக பெண் போலீஸ் டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • புதிய வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண இருப்பதாக கூறினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல்துறை துணை காண்காணிப்பாளரின் (டி.எஸ்.பி.) கீழ் 5 காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் என மொத்தம் 7 காவல் நிலையங்கள் உள்ளன. தனியாக டி.எஸ்.பி. அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்தூர், ராஜபாளையம் வடக்கு பகுதிகள் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது.

    இந்த பகுதிகளில் குற்ற சம்பவங்கள் தற்போது குறைந்து இருந்தாலும் அவ்வப்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுமாக இருந்து வருகிறது .

    இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவி 3 மாதங்களாக காலியாக இருந்த நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ராஜபாளையம் பகுதிக்கு நேரடியாக டி.எஸ்.பி. தேர்வு எழுதி பயிற்சி முடித்தவரே டி.எஸ்.பி.யாக நியமனம் செய்யப்படுவார் என தெரிவித்த நிலையில், இன்று ராஜபாளையத்திற்கு புதிய பெண்போலீஸ் டி.எஸ்.பி.யாக ப்ரீத்தி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

    இவர் 2020-ம் ஆண்டு நேரடி டி.எஸ்.பி.யாக தேர்வு எழுதி சேலத்தில் பயிற்சி முடித்து ராஜபாளையத்தில் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    கடந்த 3 மாதங்களில் ராஜபாளையம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.

    மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், புதிய வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண இருப்பதாகவும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.எஸ்.பி. பிரீத்தி தெரிவித்தார்.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் குற்ற சம்பவங்கள் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெற்றால் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


    • கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.
    • முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை:

    வீட்டு கடமையையும் பார்த்துக் கொண்டு போலீஸ் காவல் பணியிலும் இரவு, பகல் பாராது ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் 'ஆனந்தம்' என்றொரு திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இத்திட்டத்தின் நோக்கம் குடும்ப பணிகளிலும், காவல் நிலைய பணிகளிலும் ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வாரத்தில் 3 நாள் கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்தை குறைத்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைப்பது தான்.

    இந்த கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் 4,821 பெண் போலீசார் பங்கேற்றனர். அவர்களுக்கு சுயசிந்தனைக்கான பயிற்சி, எப்போதும் மகிழ்ச்சியாக முற்போக்கு சிந்தனையும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இந்த முகாம் தொடர்ந்து இரண்டு மாதம் நடக்கிறது. முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசுகையில், இங்கு நடைபெறும் இந்த பயிற்சியில் நல்ல ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொண்டு காவல் பணியினையும், குடும்ப பொறுப்பையும் சமநிலையுடன் வைத்து பணியாற்று மன அழுத்தமில்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்ற பெண் போலீசார் கூறும்போது, இந்த கவுன்சிலிங் பெண் போலீசாருக்கு நல்லதொரு பயனுள்ள நிகழ்ச்சியாகும். குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு போலீஸ் பணியினையும் டென்சனில்லாமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று முகாமில் பயிற்சி அளித்தது எங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது என்றனர்.

    மதுரை அருகே மோட்டார்சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் போலீஸ் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் ஜோதி (34). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு ஜோதி, தனது உறவினர்கள் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சத்தியவாணி (44), அவரது மகள் சூர்யகலா (20) ஆகியோருடன் ஒரே மொபட்டில் வெளியே புறப்பட்டார்.

    டி.பி.கே. ரோட்டில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்று கொண்டிருந்த ஜோதி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. அதே வேகத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் ஆம்னி பஸ் மோதியது. இதில் மொபட், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    விபத்தில் ஜோதி, சத்திய வாணி, சூர்யகலா மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஆனந்தன் 28, விக்னேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி, சத்தியவாணி, ஆனந்தன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூர்யகலா, விக்னேஷ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை சிகிச்சை பலனின்றி சூர்யகலா பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விக்னேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் பலியான சத்தியவாணி விருதுநகர் நகராட்சி அலுவலகத்திலும், ஆனந்தன் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

    விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#MaduraiAccident
    திருவனந்தபுரம் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சோதனை செய்ததாக பெண் போலீஸ் இடமாற்றம் செய்யப்பட்டார். #ChaitraTeresaJohn
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வீச்சு நடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருவனந்தபுரம் சட்டம்- ஒழுங்கு டெபுடி போலீஸ் கமி‌ஷனராக பெண் அதிகாரி சைத்திரா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இவர், மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மீது கல்வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    இதில், போலீஸ் நிலையம் மீது கல்வீசியவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் என்றும், அவர்கள் திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மறைந்திருப்பதாகவும், பெண் போலீஸ் அதிகாரி சைத்திராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா, நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்.

    அங்கு, மறைந்திருந்த குற்றவாளிகளை போலீசார் துணையுடன் பிடிக்க முயன்றார். இத்தகவல் அறிந்து ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பெண் போலீஸ் அதிகாரி கம்யூனிஸ்டு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். முதல்-மந்திரி அலுவலகத்திலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

    இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா உடனடியாக சட்டம்-ஒழுங்கு டெபுடி போலீஸ் கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அவர், பெண்கள் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கம்யூனிஸ்டு அலுவலகத்தில் சோதனைக்கு சென்றதாலேயே பெண் போலீஸ் அதிகாரி சைத்திரா இடமாற்றம் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். #ChaitraTeresaJohn
    கருணாநிதிக்கு இரங்கற்பா கவிதை வாசித்த விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற பெண் போலீஸ் வீட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். #MKStalin #Selvarani
    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் தலைமைக்காவலராக பணியாற்றியவர் செல்வராணி. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த போது இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டிருந்தார்.

    அவரது கவிதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து செல்வராணி திருச்சி மாநகர காவல் துறையில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த செல்வராணி, விருப்ப ஓய்வில் செல்வதாக காவல் துறைக்கு கடிதம் அளித்தார். அதன்பின் 3 மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். இந்நிலையில் விருப்ப ஓய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான கடிதம் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து செல்வராணிக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்துஅவர் பதவியில் இருந்து விலகினார்.

    இதுகுறித்து செல்வராணி கூறும் போது, கருணாநிதிக்கு இரங்கல் கவிதை பாடியதற்கு விளக்கம் கேட்டு எனக்கு மெமோ அளித்தனர். அதற்கு பதில் அளிப்பதற்குள் திடீரென என்னை பணியிட மாற்றம் செய்தனர். விளக்கம் தருவதற்குள் எப்படி பணியிட மாற்றம் செய்யலாம் என அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.


    என் பேச்சுரிமை பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன். பணியில் சேர்ந்தால் மீண்டும், மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு பழி வாங்கப்படலாம் என்பதால் குடும்பத்தின் நலன் கருதி பணியிலிருந்து விலகி விட்டேன். இதற்கு முன்னர் ஜெயலலிதா மறைந்த போது நான் கவிதை வாசித்தற்கு ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் நேற்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்த தகவல் அறிந்து கே.கே.நகர் ரெங்கநகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

    அப்போது செல்வராணிக்கு வழங்கப்பட்ட மெமோ கடிதத்தை வாங்கி படித்த ஸ்டாலின், இரங்கல் தெரிவித்ததற்காக மெமோ கொடுத்துள்ளனரா? எவ்வளவு ஆண்டு இன்னும் சர்வீஸ் உள்ளது? இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்க, இன்னும் 15 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தது. இனி தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ள கலைப் பணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபலமாக்குவேன் என்றார்.

    நீங்கள் கவிதை படித்ததை பார்த்தேன். தலைவர் கருணாநிதியை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன். கவலை வேண்டாம் என உருக்கமாக தெரிவித்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செல்வராணியின் கணவர் ராமச்சந்திரன், மகன் பரமாத்மிகன், மகள் பரமாத்மிகா மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர். #MKStalin #Selvarani
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், முதல் முறையாக சன்னிதானத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaSannidhanam
    சபரிமலை:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.



    கடந்த மாதம் கோவில் நடை  திறந்தபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி கோவிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண்களை அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக இன்று கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த முறையும் போராட்டம் நடைபெறலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக சன்னிதானம் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் சன்னிதானம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaSannidhanam

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #womenpolice
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் போலீஸ் வி‌ஷம் குடித்தார். அவர் அதிகாரிகள் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை அடுத்த கீழ் அணைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 25). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஆயுதப்படையில் இருந்து திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில், லதா கடந்த ஒருவாரமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று கோவில் பிரகாரத்தில் லதா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, லதா வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுய நினைவு இன்னும் திரும்பவில்லை.

    ஏடிஎஸ்பி வனிதா மற்றும் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி செல்வி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து பெண் போலீஸ் லதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

    தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு வந்த லதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    பெண் போலீஸ் லதா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    உயர் அதிகாரிகளின் தொல்லை காரணமாக அவர் வி‌ஷம் குடித்தாரா? அல்லது பணிச்சுமையால் ஏற்பட்ட மனவிரக்தியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #womenpolice
    சபரிமலைக்கு பெண் போலீஸ் மட்டுமல்ல பெண் போலீஸ் அதிகாரிகளே வந்தாலும் அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறினார். #Sabarimala #BJP
    திருவனந்தபுரம்:

    பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலையில் காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஆச்சாரங்களை கம்யூனிஸ்டு அரசு மாற்றி அமைக்க நினைக்கிறது. அங்கு பெண்களை அனுமதிக்க முயற்சி செய்கிறது. சபரிமலை ஒன்றும் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் கிடையாது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககூடாது.

    வருகிற 17-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நியமிக்க கம்யூனிஸ்டு அரசு முயற்சி செய்து வருகிறது. பெண் போலீஸ் மட்டுமல்ல பெண் போலீஸ் அதிகாரிகளே வந்தாலும் அவர்களை சபரிமலையில் அனுமதிக்க மாட்டோம். பெண் போலீசாரை பம்பையிலேயே தடுத்து நிறுத்துவோம்.

    இதற்காக எதையும் சந்திக்க பா.ஜனதா தயாராக உள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #BJP
    சேலத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம் பழைய சூரமங்கலம் புதுரோடு போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 33). காஞ்சிபுரத்தில் போலீஸ் பயிற்சியை முடித்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார்.

    தற்போது புவனேஸ்வரி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். மேலும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவிலும் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் புதுரோடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கவுதமன் (வயது 35) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது கவுதமன் பெங்களூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர் சேலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு திருமணமான 4 மாதத்தில் புவனேஸ்வரி தனது தந்தை வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புவனேஸ்வரி தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை நீண்ட நேரம் ஆகியும் அந்த அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை செல்வராஜ் கதவை தட்டினார்.

    ஆனாலும் எந்த சத்தமும் வரவில்லை. இதனால் பதறிய அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து புவனேஸ்வரியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். அவரை பரி சோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதனால் மகளின் உடலை பார்த்து தந்தை கதறி அழுதார்.

    இதுபற்றி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மிதுன்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டு மூலம் புவனேஸ்வரிக்கு நோட்டீசு அனுப்பினார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி நேற்று கணவர் கவுதமனை சந்தித்து இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு கவுதமன் மறுத்துவிட்டார்.

    இந்த மன வேதனையில் புவனேஸ்வரி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வரிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் சேலம் மேற்கு உதவி கமி‌ஷனர் செல்வராஜ் மற்றும் ஆர்.டி.ஓ. குமரேசன் ஆகியோர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×