search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retired"

    • 3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார்.
    • டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். ஏற்கனவே அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார்.

    3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். அவரது இடத்தை நிரப்புவது என்பது மிகவும் சவாலானதே.

    37 வயதான வார்னர் சர்வதேச போட்டிகளில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். 49 சதமும், 94 அரைசதமும் அடித்துள்ளார். தனது 14 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாட விருப்பத்துடன் இருப்பதாக மற்றொரு முண்ணனி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன். நிச்சயமாக தொடக்க வீரராக களம் இறங்குவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன். தேர்வு குழு என்னிடம் இதுபற்றி பேசுவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஏற்கனவே கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பேன்கிராப்ட், மேட் ரென்ஷா ஆகியோரும் தொடக்க வீரருக்கான போட்டியில் உள்ளார். அவர்களுடன் ஸ்டீவ் சுமித் தும் தற்போது இணைந்து உள்ளார்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் விளையாடுவதை விரும்ப வில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    • கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
    • பணியாற்றிய இத்தனை வருடத்தில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி.

    இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    அதுவும் நகராட்சி 19-வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கவுரவிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். 19-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு கலந்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்தபோது எப்படி நடந்துக்கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர்.

    நகராட்சித்தலைவர் பேசும்போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அனுவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

    • நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், அவரது மனைவி மல்லிகா பெயரிலும் சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • தீர்ப்பை தொடர்ந்து நடேசன், மல்லிகாவை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக 1996-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை பணியாற்றி யவர் நடேசன் (67).

    இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் கடந்த 2008-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

    இதில் நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியார் கல்லூரி பேராசிரி யரான அவரது மனைவி மல்லிகா (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடேசன் மீதும், உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்னி லையில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார்.

    அதில் அரசு பணியை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்த நடேசன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.1 கோடி அபராதமும் விதித்தார்.

    அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து நடேசன், மல்லிகாவை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம், மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதுகுறித்து அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், சமூக நலத்துறை இயக்கத்திலேயே பணியாற்றக்கூடிய அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும். ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் ஆண்டு ஊதியம் பெறக்கூடிய அனைவரையும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்றார்.

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லங்களின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றி வந்த ஜஸ்பீர்சிங் பஜாஜ் பணி ஓய்வு பெற்றார். #TNHouse
    புதுடெல்லி:

    தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ஜஸ்பீர்சிங் பஜாஜ், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லங்களின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றி வந்தார். இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

    இதையொட்டி அவருக்கு தமிழ்நாடு இல்லத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மற்றொரு முதன்மை உறைவிட ஆணையர் என்.முருகானந்தம், துணை ஆணையர் சின்னத்துரை மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜஸ்பீர் சிங்கின் பணியை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். #TNHouse

    கருணாநிதிக்கு இரங்கற்பா கவிதை வாசித்த விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற பெண் போலீஸ் வீட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். #MKStalin #Selvarani
    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் தலைமைக்காவலராக பணியாற்றியவர் செல்வராணி. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த போது இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டிருந்தார்.

    அவரது கவிதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து செல்வராணி திருச்சி மாநகர காவல் துறையில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த செல்வராணி, விருப்ப ஓய்வில் செல்வதாக காவல் துறைக்கு கடிதம் அளித்தார். அதன்பின் 3 மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். இந்நிலையில் விருப்ப ஓய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான கடிதம் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து செல்வராணிக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்துஅவர் பதவியில் இருந்து விலகினார்.

    இதுகுறித்து செல்வராணி கூறும் போது, கருணாநிதிக்கு இரங்கல் கவிதை பாடியதற்கு விளக்கம் கேட்டு எனக்கு மெமோ அளித்தனர். அதற்கு பதில் அளிப்பதற்குள் திடீரென என்னை பணியிட மாற்றம் செய்தனர். விளக்கம் தருவதற்குள் எப்படி பணியிட மாற்றம் செய்யலாம் என அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.


    என் பேச்சுரிமை பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன். பணியில் சேர்ந்தால் மீண்டும், மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு பழி வாங்கப்படலாம் என்பதால் குடும்பத்தின் நலன் கருதி பணியிலிருந்து விலகி விட்டேன். இதற்கு முன்னர் ஜெயலலிதா மறைந்த போது நான் கவிதை வாசித்தற்கு ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் நேற்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்த தகவல் அறிந்து கே.கே.நகர் ரெங்கநகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

    அப்போது செல்வராணிக்கு வழங்கப்பட்ட மெமோ கடிதத்தை வாங்கி படித்த ஸ்டாலின், இரங்கல் தெரிவித்ததற்காக மெமோ கொடுத்துள்ளனரா? எவ்வளவு ஆண்டு இன்னும் சர்வீஸ் உள்ளது? இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்க, இன்னும் 15 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தது. இனி தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ள கலைப் பணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபலமாக்குவேன் என்றார்.

    நீங்கள் கவிதை படித்ததை பார்த்தேன். தலைவர் கருணாநிதியை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன். கவலை வேண்டாம் என உருக்கமாக தெரிவித்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செல்வராணியின் கணவர் ராமச்சந்திரன், மகன் பரமாத்மிகன், மகள் பரமாத்மிகா மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர். #MKStalin #Selvarani
    தலைமை நீதிபதி மீது புகார் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார். #JusticeChelameswar #SC
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவர் செல்லமேஸ்வர்.

    கடந்த 2011-ம் ஆண்டு, அக்டோபர் 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி ஏற்ற இவர், நேற்று பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து, இவரிடம் பணியாற்றி வந்த தனிச்செயலாளர், நீதிபதி செல்லமேஸ்வர் பற்றி கூறுகையில், “அவர் ஒரு நல்ல மனிதர். நீதித்துறையின் கண்ணியத்தை நிலைநிறுத்தியவர்” என குறிப்பிட்டார்.



    நீதிபதி செல்லமேஸ்வர், இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் சக நீதிபதிகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி நிருபர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார் கூறி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது. #JusticeChelameswar #SC
    2003-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் நேற்று ஓய்வுபெற்றார். #Veerappan #Vijayakumar
    புதுடெல்லி:

    சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

    பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ஆனார். 1991-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா 2001-ல் மீண்டும் முதல்-அமைச்சரான பிறகு கே.விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆனார்.

    அவர் போலீஸ் கமிஷனராக இருந்தபோது சென்னையில் 15-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலீஸ் கமிஷனராக இருந்த நிலையில் 2003-ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண் டோ படையின் தலைவர் ஆனார். 2004-ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார்.

    2012-ம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு பணிக்காக மத்திய உள்துறையில் சேர்க்கப்பட்ட அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.

    6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார் நேற்று அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். #Veerappan #Vijayakumar #Tamilnews 
    ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் இருந்து மர்ம நபர்கள் திருடி சென்ற இரும்பு லாக்கர் குட்டையில் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
    வரதராஜன்பேட்டை: 

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றிருந்த போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவில் எதுவும் சிக்காததால் படுக்கை அறையில் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயன்றனர். அது, முடியாமல் போகவே அந்த லாக்கரை அப்படியே தூக்கி சென்று விட்டனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து ஊர் திரும்பிய பழனிசாமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அதில் 19 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கம், 250 கிராம் வெள்ளி பொருட்கள், வங்கி புத்தகங்கள், நில பத்திரங்கள் ஆகியவை இருந்ததாக தெரிவித்தார்.

    இந்த திருட்டு குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பழனிசாமி வீட்டின் பின்புற பகுதியில் உள்ள குட்டை அருகே வங்கி புத்தகங்கள், நில பத்திரங்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் இரும்பு லாக்கரில் இருந்த நகை-பணத்தை எடுத்துக் கொண்டு, லாக்கரை குட்டையில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து தனிப்படை போலீசார் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அவர்களும் அங்கு வந்தனர்.

    பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் வீரர்கள் குட்டையில் இறங்கி தண்ணீரில் கிடந்த இரும்பு லாக்கரை தூக்கி வெளியே கொண்டு வந்தனர். அந்த இரும்பு லாக்கரை போலீசார் திறந்து பார்த்த போது அதில் நில பத்திரங்கள், 2 தங்க தோடுகள், 2 வெள்ளி விளக்குகள் ஆகியவை மட்டுமே இருந்தன. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×