உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்ற அவசர கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்ற அவசர கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் இளவரசன், மேலாளா் கண்ணன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் செங்கோட்டை நகராட்சி வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தையில் மேம்பாட்டு பணிகள் தொடர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பணிகள் தொடர அனைத்து உறுப்பினா்களும் வலியுறுத்தினா். தொடா்ந்து 8-வது வார்டு தி.மு.க. நகர்மன்ற உறுப்பினா் ரஹீம் பேசியதாவது:-
தமிழக அரசின் கலைஞா் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவினை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை படி ரூ.159.40லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
19-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் முத்துப்பாண்டி, 3-வது வார்டு சுடர்ஒளி மற்றும் மன்ற உறுப்பினா்கள் கழிவுநீர் ஓடையை சீர்செய்தல், சாலைகளை சீரமைப்பு, சீரான குடிநீர் வழங்கல், தெருவிளக்கு வசதிகள் செய்து தரக்கோரி பேசினா்.
முடிவில் மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி உறுதியளித்தார்.