உள்ளூர் செய்திகள்
தஞ்சை மகர்நோன்புசாவடி ஜோதி விநாயகர் முத்துப்பல்லக்கில் வீதி உலா மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஜோதிவிநாயகர் அரு

தஞ்சையில் விடிய விடிய நடந்த முத்துப்பல்லக்கு விழா

Published On 2022-05-19 09:28 GMT   |   Update On 2022-05-19 09:28 GMT
தஞ்சையில் விடிய விடிய நடந்த முத்துப்பல்லக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில்  திருஞானசம்பந்த மூர்த்தி குருபூஜையையொட்டி  நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் பல்வேறு கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் எழுந்தருளி 4 ராஜவீதிகளிலும் உலா வருவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழா நேற்று இரவு நடந்தது. தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவித்து பூஜை நடந்தது. இரவு விநாயகரும், திருஞானசம்பந்தரும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர்.

முன்னதாக ஜோதி விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், சர்பத் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டன.

தஞ்சை மேலஅலங்கத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்றிரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி புஷ்பஅலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தஞ்சை சின்ன அரிசிகார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் பாலதண்டாயு–தபாணியும், விநாயகரும் மின் விளக்கு–களால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருஞானசம்பந்தர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. 

இதேபோல் கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவிலில் இருந்து வெள்ளை பிள்ளையாரும், தெற்குவீதியில் உள்ள கமலரத்ன விநாயகர் கோவிலில் இருந்து கமலரத்ன விநாயகரும், 

கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி  கோவிலில் இருந்து  சுப்பிரமணியசாமியும், தஞ்சை ஆட்டுமந்தை அஞ்சல்கார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பாலதாண்டாயுதபாணியும், திருஞானசம்பந்தரும் பல்லக்கில் எழுந்தருளினர். இதேபோல் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து முத்துப்பல்லக்கில் விநா–யகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. 

இந்த பல்லக்குகள் அனைத்தும் அந்தந்த கோவில்களில் இருந்து  மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய 4 ராஜவீதிகளில் வலம் வந்தன. 

ஆடி அசைந்து வந்த முத்துபல்லக்கை பார்த்து பக்தர்கள் மெய்மறந்து ரசித்தனர். விடிய விடிய ராஜவீதிகளில் உலா வந்த முத்துபல்லக்கு விழா இன்று அதிகாலை வரை நடைபெற்றது. பின்னர் பல்லக்ககள் அந்தந்த கோவிலுக்கு சென்றன. 

கொரோனா பரவல் குறைந்ததால் ஆயிரக்–கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News