உள்ளூர் செய்திகள்
.

நள்ளிரவு காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 3 சிறுமிகள் மீட்பு

Published On 2022-05-18 10:01 GMT   |   Update On 2022-05-18 10:01 GMT
சேலத்தில், நள்ளிரவு காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
சேலம்:

சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் சிறுமிகள் காப்பகம் உள்ளது.  குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுமிகள் இங்கு தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு நல்ல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த காப்பகத்தில் தற்போது 25-க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 1 மணியளவில் காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள், வெளியேறி  அங்கிருந்து ஆட்டோவில் ஏறி தப்பி ஓட முயற்சித்தனர்.

 அப்போது  ஆட்டோ டிரைவரிடம்  நாங்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று கூறினர். 

இதில் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் இந்த  3 சிறுமிகளையும் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதில் சிறுமி ஒருவர் தனது தந்தை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாகவும், தனது தந்தையை பார்க்க வேண்டும் எனவும், எங்களை விடுவிக்குமாறும்  தெரிவித்தார். 

இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார், இது பற்றி ஆஸ்பத்திரியில் விசாரித்து விட்டு, 3 சிறுமிகளையும்  பாதுகாப்பாக அழைத்து சென்று  காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News