உள்ளூர் செய்திகள்
சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2022-05-16 10:09 GMT   |   Update On 2022-05-16 10:09 GMT
கோவில்பட்டியில் இருந்து லக்கம்மாள்தேவி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படமால் இருப்பதை கண்டித்து கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து லக்கம்மாள்தேவி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலமாக விஜயாபுரி, கசவன்குன்று, செமப்புதூர், டி.சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 

கடந்த சில தினங்களாக காலையில் 6.30 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ரூ.200 ஆட்டோவிற்கு கொடுத்து வரும் நிலை இருந்துள்ளது. 

இது குறித்து கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இன்று காலையும் அரசு பஸ் இயக்கப்படவில்லை என்பதால் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

அதிக பணம் செலவு செய்து கோவில்பட்டிக்கு அவர்கள் வந்த நிலையில் அண்ணா பஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News