உள்ளூர் செய்திகள்
கீழக்கடையம் பகுதி மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை
கீழக்கடையம் பத்திரகாளியம்மன் கோவில் சப்பரபவனி செல்லும் பாதையில் உயர்மின் அழுத்த கம்பி அமைப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடையம்:
தென்காசி கலெக்டர் கோபாசுந்தரராஜூக்கு கீழக்கடையம் பகுதி பொதுமக்கள் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கீழக்கடையத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் சப்பரபவனி கடையம் போலீஸ் நிலையம் முன்பாக உள்ள சாலை வழியே சென்று வில்வவனநாத சுவாமி கோவிலில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் பாதை வழியாக பக்தர்கள் தோளில் தாங்கி கொண்டு செல்வது கடந்த 100 ஆண்டுகளாக 18 பட்டி கிராமமக்களால் நடைபெற்று வருகிறது.
தற்போது கடையம் போலீஸ் நிலையம் அருகே சாலை வழியே செல்லும் வகையில் உயர்மின்அழுத்த கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பத்திரகாளியம்மன் கோவில் சப்பரம் செல்லும் சாலையில் உயர்மின்அழுத்த கம்பி அமைக்கப்பட்டால் சப்பரம் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே மாற்று பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.