உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலி
பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியானார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காசி கடை தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகள் வேதநாயகி (வயது 16). இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு தனது அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
உத்தமர் கோவில் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பைக் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேதநாயகி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வேதநாயகியை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேதநாயகி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.