உள்ளூர் செய்திகள்
விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சயானிடம் 2வது நாளாக தனிப்படை விசாரணை

Published On 2022-05-10 06:44 GMT   |   Update On 2022-05-10 06:44 GMT
கொடநாடு வழக்கில் மீண்டும் சயானிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்போது மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை சயான், கொடநாடு மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அ.தி.மு.க நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர்கள் உள்பட 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொடநாடு வழக்கு மறுவிசாரணை தொடங்கியபோது வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் விசாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் சயானிடம் தனிப்படை போலீசார் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதான அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 5 மணி நேரம் நடந்த விசாரணையில் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், பல்வேறு கேள்விகளை எழுப்பியும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரும் தனக்கு தெரிந்த பதில்கள் அனைத்தையும் தெரிவித்தார். இதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

இன்று 2வது நாளாக சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் கொள்ளையின்போது சில பொருட்கள் மற்றும் ஆவணங்கள் மூட்டையாக கட்டி காரில் கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், அறைகளில் என்ன பொருட்கள் தேடினீர்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சயான் பதில்களை கூறியுள்ளார்.

கொடநாடு வழக்கில் மீண்டும் சயானிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News