உள்ளூர் செய்திகள்
அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்

மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்

Published On 2022-05-09 10:24 GMT   |   Update On 2022-05-09 10:24 GMT
கடந்த 3 நாட்களில், 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களும், 70-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சேதமடைந்துள்ளன.
காரமடை:

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளில் 50 சதவீத விவசாயிகள் வாழை பயிர் செய்து வருகின்றனர். இது அவர்களின் பிரதான தொழிலாகவே உள்ளது.
 
சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதியில், கடந்த 2 மாதங்களாக, யானைகளின் நடமாட்டம் அதிகமாக  உள்ளது. குறிப்பாக தாசம்பாளையம், ராமேகவுண்டன்புதுார் பகுதிகளில், கடந்த, 2 வாரமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் அருகே வெள்ளீஸ்வரர் மலை செல்லும் வழியில் யானைகள், வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. அப்படி வரும் யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருக்கும்  வாழை, தென்னை மரங்களை தின்றும், காலால் மிதித்தும், கீழே தள்ளியும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இன்னும், 2 மாதங்களில் பூவன், தேன் வாழை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. கடந்த 3 நாட்களாக, 3 யானைகள் தினமும் தோட்டத்திற்கு வந்து, வாழை மரங்களையும், தென்னை மரங்களையும் சேதம் செய்து வருகின்றன. 

இரவில் காவலுக்கு இருக்கும், நபர்களை யானைகள் விரட்டுகின்றன. இதனால் விவசாயிகளின் உயிருக்கு, உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது. வனத்துறையினரும், யானைகளை விரட்டுகின்றனர். 

இருப்பினும், காட்டு யானைகள் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்துகின்றன. கடந்த 3 நாட்களில், 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களும், 70-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சேதமடைந்துள்ளன. 

எனவே, தமிழக அரசு, வனப்பகுதி ஓரம் ஆழமான அகழி அமைக்க வேண்டும். சேதமடைந்த வாழை, தென்னை மரங்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News