உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை

நீர்மட்டம் 106.15 அடியாக உயர்வு- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 245 கனஅடியாக சரிவு

Published On 2022-05-06 12:15 GMT   |   Update On 2022-05-06 12:15 GMT
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:

ஒகேனக்கலில் கடந்த 3ந் தேதி 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக குறைந்து நேற்று 5 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஆனாலும் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் பரிசல்ககளிலும் உற்சாகமாக சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர். ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 9 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4 ஆயிரத்து 245 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று 106 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 106.15 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News