உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையனை விரட்டிய பெண்கள்

Published On 2022-05-02 09:59 GMT   |   Update On 2022-05-02 09:59 GMT
நெல்லையில் இரவு நேரங்களில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையனை பெண்கள் விரட்டிய காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது.
நெல்லை:

பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள அன்னை நகர் பகுதியில் ஒரு வீடு பூட்டிக் கிடந்தது.


இந்த வீட்டிற்குள் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு புகுந்த கொள்ளையர்கள் அந்த வீட்டிலுள்ள கதவை உடைத்து பீரோவில் உள்ள நகை மற்றும் பணம் கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அந்த வீட்டிற்குள் அதன் உரிமையாளர்கள் சென்ற போது வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வீட்டின் அருகே உள்ள பெண்களும் அங்கு சென்ற போது உள்ளே கொள்ளையன் ஒருவன் இருந்துள்ளார்.

உடனே அந்தப் பெண்கள் எல்லோரும் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு கொள்ளையனை நோக்கி வீசினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

இதனால் பதறிப்போன கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருந்தபோதிலும் அந்த வீட்டில் உள்ள 3 பெண்கள் கொள்ளையனை விரட்டி உள்ளனர்.  

இந்த காட்சி அங்கு உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. கொள்ளை போன சம்பவம் தொடர்பாக பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையரை விரட்டும் போது கொள்ளையன் செல்போன் மற்றும் அவரது இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இதனையும் பாளை குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News