உள்ளூர் செய்திகள்
சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய பிரத்யேக குழு
மே 5-ந் தேதிக்குள் பட்டியலை தயாரிக்க, கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யும் பொருட்டு பிரத்யேக குழுவினர், ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்க ல்வி ப்பணியில் முன்னேற்றம் காணும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து மாவட்ட வாரியாக கேடயங்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2019 -20ம் கல்வியாண்டில் மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 111 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளியின் பெயர் பொறித்த கேடயங்கள் பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனையகம் வாயிலாக வழங்கப்பட்டது. அதன் பின் கொரோனா காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் நடப்பாண்டு வழங்கப்பட உள்ளதால் பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் திடீர் விசிட் அடித்து சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதி, குழந்தைகளின் கல்வி ,இணை செயல்பாடுகள் வளர்ப்பதில் முக்கியத்துவம் தருதல், குழந்தை மைய சூழலுக்கு முக்கியத்துவம் தருதல், வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் செயல்பாடு மற்றும் அதில் குறைந்தபட்சம், 5 புதிய உத்திகளை கையாளுதல், மாணவர் சேர்க்கை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள், பன்முகத்திறன் வெளியிடுவதற்கான வாய்ப்பு எனஒவ்வொன்றுக்கும் தரமதிப்பீடு வழங்கப்படவுள்ளது.
இதில் 90 மதிப்பெண் பெறும் பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்படும். மே 5-ந் தேதிக்குள் இப்பட்டியலை தயாரிக்க, கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.