உள்ளூர் செய்திகள்
உடுமலை கிருஷ்ணாபுரத்தில் கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி
குறித்த காலத்திற்குள் கரும்புகளை அறுவடை செய்யாவிட்டால் அவை பக்கவாட்டில் முளைப்பதோடு பிழிதிறன் இல்லாமல் போய்விடும் என கவலை தெரிவிக்கின்றனர்.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டிற்கான கரும்பு அரவை கடந்த 16-ந்தேதி துவங்கியது. ஒரு லட்சத்து 8 டன் கரும்பு அரவை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கரும்பு ஆலையில் கரும்பு அரவை துவங்கி ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில், சர்க்கரை ஆலையானது சரிவர இயங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே கரும்பு ஆலை இயங்கி வருவதாகவும் கரும்பு வெட்டுவதற்கான கூலி தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பியே விவசாயிகள் உள்ளனர். குறித்த காலத்திற்குள் கரும்புகளை அறுவடை செய்யாவிட்டால் அவை பக்கவாட்டில் முளைப்பதோடு பிழிதிறன் இல்லாமல் போய்விடும் என கவலை தெரிவிக்கின்றனர்.
டன்னுக்கு ரூ.30,50 என அரசு அறிவித்த போதும் வெட்டுக் கூலி கழித்து டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை கிடைக்கும் என கூறிய விவசாயிகள் நடப்பு பருவத்தில் நல்ல மழை பெய்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்ததால் ஏக்கருக்கு 40 டன் வரை மகசூல் கிடைத்திருப்பதாகவும் குறித்த காலத்தில் கரும்பினை அறுவடை செய்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். காலதாமதம் செய்தால் நஷ்டம் ஏற்படும் எனக் கூறினர்.