உள்ளூர் செய்திகள்
அத்திக்கோட்டை ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் - கலெக்டர் பேச்சு
அத்திக்கோட்டை ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் அத்திக்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:
தேசிய ஊராட்சிகள் தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் அத்திக்-கோட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பொது மக்களு-டைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிராமத்தினை பசுமையாக, தூய்மையாக வைத்திருப்பதற்கும் கிராமத்தின் நீர் மேலாண்மை, குடிநீர் வினியோகம் சிறப்பாக செயல்படுவதற்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அத்திக்கோட்டை ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடரந்து அத்திக்கோட்டை ஊராட்சியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்பட வேண்டிய இலக்குகளாக நீர் நிறைந்த கிராமம், சுத்தமான பசுமையான கிராமம், அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராமம் ஆகிய மூன்று இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு கலெக்டர் முன்னிலையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் அண்ணாதுரை எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் முருகானந்தம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மோகன், உதவி திட்ட அலுவலர் உஷாராணி, வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கோமதிதங்கம், தாசில்தார் கணேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், கோவிந்தராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் அமராவதி, நித்தியானந்தம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.