மேட்டுப்பாளையம் அருகே இன்று காலை மரத்தில் கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் பலி
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முக்தார் அலி. இவரது மகன் முகமது இர்பான்(வயது18).
இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். பாரதி நகரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரது மகன் முகம்மது தவ்பீக்(16). பிளஸ்-1 மாணவர்.
அப்துல் ஹமீது என்பவரது மகன் ஆரிப் என்கிற முகமது ஆரிப் (16).பிளஸ்-1மாணவர். கைசர் அகமது என்பவரது மகன் காலித்(16).10-ம் வகுப்பு மாணவர். சலீம் என்பவரது மகன் ஹர்ஷத்(16).பிளஸ்1 மாணவர்.
நண்பர்களான இவர்கள் 5 பேரும் இன்று காலை 6 மணி அளவில் ஒரு காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு கோத்தகிரிக்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்து மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு திரும்பினர்.
காரை முகமது இர்பான் ஓட்டி வந்தார். கார் கோத்தகிரி ரோட்டில் கடைசி வளைவில் வந்த கொண்டிருந்தது. அப்போது வளைவில் திரும்பியபோத திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அங்குமிங்கும் ஓடிய கார் ரோட்டின் வலதுபுறம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற முகம்மது தவபீக்(16), முகமது ஆரிப்(16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விபத்தில் இறந்த 2 பேரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.