உள்ளூர் செய்திகள்
விபத்து

கோவையில் இன்று அதிகாலை ‘பீஸ்ட்’ படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் பலி

Published On 2022-04-13 11:42 GMT   |   Update On 2022-04-13 11:42 GMT
கோவையில் நண்பர்களுடன் காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள சந்தோஷ் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் கவுசிக் (வயது 21). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சொந்தமாக தொழில் செய்து வந்தார்.

இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரீத்வி (20). கல்லூரி மாணவர். கவுசிக்கின் உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா. நடிகர் விஜய்யின் ரசிகரான இவர்கள் 4 பேரும் இன்று அதிகாலை வெளியான பீஸ்ட் படம் பார்ப்பதற்கு முன்பதிவு செய்து இருந்தனர். 4 பேரும் இரவு ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர். பின்னர் காரில் பீஸ்ட் படம் பார்ப்பதற்காக ஒரு காரில் அதிகாலை 2.45 மணியளவில் வாலாங்குளம் உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்றனர். காரை கவுசிக் ஓட்டிச் சென்றார்.

அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற கவுசிக் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பிரீத்வி, கனிஷ்கா, நிவேதா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த கவுசிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News