உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி நகராட்சியில் வீடுகளில் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் குடிநீர் தட்டுப்பாடு
நகராட்சி அதிகாரிகள் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்து மின் மோட்டாரை பறிமுதல் செய்வதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி நகராட்சியில் தற்பொழுது வெயில் காலம் என்பதால் பல்வேறு வார்டுகளில் தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் அனைத்து பகுதியிலும் சட்டவிரோதமாக மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுத்து வருகின்றனர்.
திட்டக்குடி நகராட்சி மூலமாக நீர்த்தேக்க தொட்டியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருவதில்லை. வீடுகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது தான் காரணம்.
காலை, மாலையில் திறந்து தண்ணீர் விடும்போது அதேசமயம் மின்சாரத்தை நிறுத்தி வைத்தால் தண்ணீர் முறையாக அனைத்து வீடுகளின் சென்றடையும். அந்த அளவிற்கு மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வெ.கணேசனிடம் குறைகளை எடுத்து கூறப்பட்டு உள்ளது.
ஆனால் அமைச்சர் தெரிவிப்பதை எடுத்து செய்ய தற்போது திட்டக்குடி நகராட்சியில் கமிஷனர் தவிர நகராட்சி நிர்வாகத்திற்கு புதிய ஊழியர்கள் இன்னும் நியமனம் செய்யப்படாததால் வேலைகள் அனைத்தும் செயல்படுத்த முடியாது நிலையில் உள்ளது.
எனவே நகராட்சி அதிகாரிகள் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்து மின் மோட்டாரை பறிமுதல் செய்வதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுகொண்டனர்.