உள்ளூர் செய்திகள்
பஸ்சில் காட்சிப்படுத்தப்பட்ட வ.உ.சி புகைப்பட கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
தஞ்சையில் பஸ்சில் காட்சிப்படுத்தப்பட்ட வ.உ.சி பற்றிய புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150-வது பிறந்த--நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு, சுதந்திரத்திற்காக பாடுபட்ட அவரது செயல்கள் குறித்து மாணவ-மாணவிகள்தெரிந்து கொள்ளும் வகையில் அரசு பஸ்சில் அவரது புகைப்படக் கண்காட்சி காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
இந்த நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்-ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பஸ்சில் ஏறி வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு ஆகியவை அடங்கிய புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
அந்த பஸ்ஸில் இடம் பெற்றிருந்த வ.உ.சிதம்பரனாரின் மார்பளவு சிலைக்கு மரியாதை செய்தார். கலெக்டருடன் மாணவ-மாணவிகளும் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர். இதையடுத்து கலெக்டர் மாணவ- மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இந்த கண்காட்சியில் வ.உ.சிதம்பரனார் பற்றிய அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருந்தன. கோவை சிறையில் அவர் செக்கிழுத்த புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து நகரும் புகைப்பட கண்காட்சியானது மாணவ- மாணவிகள் பார்க்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செல்ல உள்ளது.
நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அதிகாரி குழந்தை ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.