உள்ளூர் செய்திகள்
அவிநாசி கோவில் தேரோட்ட நேரத்தை மாற்றியமைக்க கூடாது- அமைச்சருக்கு மனு
கோவில் தேரோட்டத்தை மாற்றியமைக்க ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவிநாசி:
அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 1993-ல் தேர் வெள்ளோட்டம் துவங்கி 2019 வரை 27 ஆண்டுகளாக தொடர்ந்து முற்பகல் தேர்வடம் பிடித்து பிற்பகல் 3 மணிக்கு நிலை சேரும் விதமாக, தேர்த்திருவிழா நடந்து வருகிறது.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கெடுப்பர்.
இந்நிலையில் கோவில் தேரோட்டத்தை மாற்றியமைக்க ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவிநாசியில் உள்ள கருணாம்பிகை அம்மன் உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி தலைவர் நடராஜன், செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் பழனிசாமி ஆகியோர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுப்பியுள்ள மனுவில்,
தேரோட்ட விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எங்கள் அன்னதான கமிட்டி சார்பிலும் வேறு பல குழுக்கள் சார்பிலும், பல மண்டபங்களில் பக்தர்களின் பசியாற்றவும், தாகம் தீர்க்கவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும். பக்தர்கள், பசியாறி செல்வர்.
சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளும் திருவிழாவன்று, ஒருநாள் விடுமுறை விடுவர். இந்நிலையில் சிலரின் சுய விருப்பத்திற்கேற்ப தேரோட்டத்தை மாலையில் மாற்றியமைக்க ஆலோசனை கூறி வருகின்றனர்.
இதனால், அன்னதானம் வழங்குவது தடைபடும். விழாவுக்கு வருவோர் இரு நாள் விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்பு இருக்காது.
எனவே, தேரோட்ட நேரத்தை மாற்றியமைக்காமல், பழைய நடை முறையிலேயே தேரோட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.