உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் தேரோடும் வீதிகளில் கலெக்டர் ஆய்வு
தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோடும் வீதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. வருகிற 13-ந்தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது.
தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும். தஞ்சை மேலவீதியில் தேர் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தேரோட்டம் நடைபெற உள்ள 4 ராஜவீதிகளிலும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று ஆய்வு செய்தார்.
தேர் தயார் படுத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலையின் இருபுறங்களிலும் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டார். இதையடுத்து தேரோடும் வீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசித்தார்.
இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் ரஞ்சித், அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.