உள்ளூர் செய்திகள்
.

நகையை ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்டு சேலம் மண்டல இணைப்பதிவாளர் உத்தரவு

Published On 2022-03-28 08:17 GMT   |   Update On 2022-03-28 08:17 GMT
நகையை ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளரை சஸ்பெண்டு செய்து சேலம் மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.
சேலம்: 

சேலம் மாவட்டத்தில் உள்ள 252 கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு கீழ் நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், காடையாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் சரிபார்க்க சென்றார். 

அப்போது, பயனாளியிடம் நகையை திரும்ப ஒப்படைப்பதற்கு கூட்டுறவு சங்க செயலாளர் விஜயகுமார் (வயது 56) என்பவர் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து ஓமலூர் சரக துணைப்பதிவாளர் சுவேதா நடத்திய விசாரணையில், செயலாளர் விஜயகுமார் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காடையாம்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் விஜயகுமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News