உள்ளூர் செய்திகள்
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆவின்பால் திட்டம் - பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். விற்பனை விலையை மூன்று ரூபாய் குறைத்ததால் ரூ. 270 கோடி நஷ்டம் ஏற்படுவதை, அரசு ஈடுகட்ட வேண்டும்.
திருப்பூர்:
அங்கன்வாடி குழந்தைகளுக்கு தினமும் ஆவின் பால் வழங்கும் திட்டத்தை துவக்க வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கொழந்தைசாமி கூறியதாவது:
பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். விற்பனை விலையை மூன்று ரூபாய் குறைத்ததால் ரூ. 270 கோடி நஷ்டம் ஏற்படுவதை, அரசு ஈடுகட்ட வேண்டும். பால் பணம் பாக்கியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தடையின்றி பால் பணம் வழங்க ஏதுவாக ஆவின் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட வேண்டும்.
பால் வழங்கும் இடத்திலேயே, பாலின் தரத்தை பரிசோதித்து வாங்க வேண்டும். கால்நடை தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்குவதுடன், பால் பொருட்கள் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும். பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும்.
அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தரமான ஆவின் பால் வழங்கும் திட்டத்தை, அரசு துவக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பது போல், ஐ.எஸ்.ஐ., விதிமுறையை பின்பற்றி, பாலில் உள்ள சத்துக்களை கணக்கிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினர்.