உள்ளூர் செய்திகள்
சந்தியூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் கருத்தரங்கம்
சந்தியூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் காய்கறிகள், பழங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி வட்டாரம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான பழங்கள், காய்கறிகள் சாகுபடி கருத்தரங்கு நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், தோட்டக்கலை உதவி பேராசிரியர் மாலதி ஆகியோர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள், அரப்பு மோர் கரைசல் பற்றியும், குழித்தட்டில் நாற்றாங்கால் வளர்த்தல், வாழையில் மதிப்புக்கூட்டுதல், வாழை கரணை நேர்த்தி பற்றியும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
இதேபோல் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தேமோர் கரைசல், பழ ஈ பொறி, சூரிய மின் விளக்குப் பொறி, ஜீரோ எனர்ஜி கூல் சேம்பர் பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் கொடுத்தனர்.
மேலும் வேளாண் பல்கலைக்கழக காய்கறி துறை சார்பில் நாற்றங்கால் அமைக்க உரிமம் பெறும் வழிமுறை, கத்திரி, கொடி வகை பயிர்களில் ஒட்டு கட்டும் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக தோட்டகலை சார்பில் பழங்கள், காய்கறிகள், பூக்கள் இடம்பெற்ற கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர்.