உள்ளூர் செய்திகள்
பிழையான சான்றிதழால் தவிக்கும் பொதுமக்கள்
தவறான விவரங்களுடன் சான்றிதழ் வழங்கிவிட்டால் திருத்திய சான்றிதழ் பெற முடியாத அளவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
திருப்பூர்:
வருவாய்த்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக, ‘இ-சேவை’ மையங்கள் செயல்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள் சார்பில் தனியார் ‘இ-சேவை’ மையங்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முறையான உரிமமும், பயிற்சியும் பெறாத தனியார் சேவை மையங்கள், கவனக்குறைவாக செய்யும் பிழைகளை திருத்த முடியாமல் செல்லாத சான்றிதழ்களுடன் மக்கள் அல்லாட வேண்டிய நிலை உள்ளது.
தவறான விவரங்களுடன் சான்றிதழ் வழங்கிவிட்டால் திருத்திய சான்றிதழ் பெற முடியாத அளவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தன்னார்வலர்கள் கூறுகையில், ‘’தனியார்’இ-சேவை’ மையங்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் விரைவில் வேலை முடியும் என்பதற்காக, மக்கள் செல்கின்றனர்.
பெயர், பிறந்ததேதி, முகவரி, ஆதார் எண் போன்ற தகவல்கள் பிழையாக பதிவு செய்து, பிழையுடன் சான்றிதழ் வந்துவிடுகிறது. தவறை திருத்தாவிட்டால் அனைத்து வகை சான்றிதழும், பிழையாகவே இருக்கும். அதை உடனடியாக சரிசெய்ய வசதியில்லாததால் விண்ணப்பதாரர் அவதிக்குள்ளாகின்றனர்.
கலெக்டரிடம் மனு கொடுத்து சென்னைக்கு பரிந்துரைத்து, சான்றிதழ் ரத்து செய்ய மாதக் கணக்காகிறது. எனவே தனியார் சேவை மையங்களை முறைப்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். தவறான விவரங்களுடன் வழங்கிய சான்றிதழ்களை ரத்து செய்து மறுபதிவு செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.