உள்ளூர் செய்திகள்
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா-நாளை நடக்கிறது
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருவிழா நாளை (31-ந்தேதி ) நடக்கிறது.
ஏரல்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் சுவாமி சப்பரத்தில் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்து வருகிறார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
நாளை மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
நாளை மறுநாள் (1-ந்தேதி) காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், 8.30 மணிக்கு மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாக சாந்தி, இரவு 10 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி ஆகியவை நடக்கிறது.
2-ந்தேதி தை அமாவாசை நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடல், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலய தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ. கருத்தபாண்டி நாடார் செய்து வருகிறார்.