உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சியில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 20 பேர் மீது வழக்கு
பொள்ளாச்சியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
கோவை:
பொள்ளாச்சி நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. புதிய திட்ட சாலை, கோவை-பொள்ளாச்சி சாலை, பொள்ளாச்சி-உடுமலை சாலை, பொள்ளாச்சி-பாலக்காடு சாலை, பொள்ளாச்சி-&பல்லடம் சாலை, திருவள்ளுவர் திடல், மார்க்கெட் சாலை, ராஜாமில் சாலை போன்ற முக்கிய வீதிகளில் எப்போதும் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
இந்த சாலைகளில் வாகன ஓட்டிகளில் பெரும் பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திச்செல்கின்றனர். போக்குவரத்து போலீசார் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியும் வாகன ஓட்டிகளில் சிலர் கண்டுகொள்வதில்லை. இதனால், நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய புதிய வாகனம் ஒன்றை போக்குவரத்து போலீசார் கொண்டுவந்துள்ளனர்.
இந்த வாகனம் மூலம் பொள்ளாச்சி பகுதிகளில் முதல் கட்டமாக வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தினர். தொடர்ந்து நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி டிஎஸ்பி உத்தரவுப்படி பொள் ளாச்சி முக்கிய வீதிகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட 20 வாகனங்களில் உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. வாகனம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.