உள்ளூர் செய்திகள்
புதியம்புத்தூரில் தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனை
புதியம்புத்தூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் ஏராளமான விளை நிலங்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு பருவத்திலும் தக்காளியில் இருந்து விதைகளை எடுத்து பாதுகாப்பாக வைத்து நாற்றங்கால் அமைத்து தக்காளி விதைகளை விதைத்து 90 நாட்களுக்கு குறையாமல் வளர்த்து அந்த நாற்றுக்களை பிடுங்கி நடவு செய்வார்கள். இப்பகுதிகளில் நாட்டு தக்காளி, தருவைகுளம் தக்காளி ஆகிய 2 ரகங்களை பயிர் செய்வது வழக்கம்.
நாட்டு தக்காளி பயிரிட்டால், காய்த்து பலன் கொடுக்கும் சமயத்தில் பனிப்பொழிவால் இலை கருகி மகசூல் தராமல் அழிந்துவிடுகிறது.
இதனால் விவசாயிகள் மாற்று வழியாக தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து ஐபிரிட் ரக தக்காளி நாற்றுகளை வாங்கி பயிரிடுகின்றனர்.
தக்காளி விதைகள் ஒன்றுக்கு 50 பைசா வீதத்தில் பணத்தை முன்கூட்டியே வங்கியில் செலுத்தி லாரி மூலம் தக்காளி நாற்று வாங்கி நடவு செய்கின்றனர்.
பொங்கலுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்ற இந்த ரக தக்காளி பொங்கல் முடிந்த பின்பு குறையத்தொடங்கியது. தற்போது கிலோ ரூ.15-க்கு விற்பனையாகிறது.
இந்த தக்காளி செடிகளுக்கு பூச்சி தாக்காமல் இருக்க அடிக்கடி பூச்சி மருந்து அடிக்க வேண்டும். கடந்த ஒருவாரமாக புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது. அதனை தாங்கி இந்த ரக தக்காளி செடி தாக்குபிடித்து நிற்கிறது.
தற்போது அங்கு நல்ல விளைச்சல் இருந்தும் கிலோ ரூ.15-க்கு விற்பனையாவதால் இப்பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் விலை கட்டவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.