உள்ளூர் செய்திகள்
விண்ணப்பம்

‘பெண்சக்தி’ விருதுக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-01-23 08:36 GMT   |   Update On 2022-01-23 08:36 GMT
பெண் சக்தி விருதுக்கான தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையின் இணைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

பல்கலைக்கழக மானியக்குழு செயலர் ரஜனிஷ் ஜெயின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களை அடையாளப்படுத்தும் வகையில் பெண் சக்தி (நாரி சக்தி புரஸ்கார்) விருதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக அதிகாரமளித்தலில் சிறந்த பணிகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. இந்த விருது சான்றிதழுடன் ரூ.2 லட்சம் ரொக்கம் கொண்டது ஆகும்.

எனவே அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை www.awards.gov.in என்ற இணையதள முகவரியில் ஜனவரி 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெண் சக்தி விருதுக்கான தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையின் இணைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிந்துரையின் போது விருதுக்காக வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையடுத்து விருதுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிந்துரைகளை மத்திய அரசின் தேர்வுக்குழுவினர் ஆய்வு செய்து இறுதிப்பட்டியலை வெளியிடுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மார்ச் 8-ந்தேதி ‘பெண்சக்தி’ விருதுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News