உள்ளூர் செய்திகள்
கோவையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை:
கோவை கடந்த சில மாதங்களாக மாணவர்கள், வாலிபர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை நடந்து வருகிறது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை போத்தனூர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் நாகராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் போத்தனூர் சாலை ஜம்ஜம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அதில் அவர்களிடம் 40 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ஹசினர் (வயது 27) மற்றும் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த மன்சூர்( 30) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை உக்கடம் பை-பாஸ் சாலை, வின்சென்ட் சாலை சந்திப்பில் உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 18 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கோவையைச் சேர்ந்த அப்துல் அகமது (29), தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த வினோத்குமார் (32), ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (21) ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தேனி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு காரில் கஞ்சா கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.