உள்ளூர் செய்திகள்
வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: வீட்டு மாடிகள்- வீதிகளில் நின்று பக்தர்கள் தரிசனம்
முழு ஊரடங்கு காரணத்தால் சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் இன்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த 20-ந்தேதி முதல் 108 யாக குண்டங்களில் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. நாடு முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட முக்கிய நதியின் தீர்த்தங்கள் பூஜையில் வைக்கப்பட்டு இருந்தது.
6 கால யாக பூஜை கள் நிறைவடைந்து இன்று காலையில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பு கோபுர கலசங்களுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.
காலை 10 மணியளவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுர விமானங்களுக்கும் கலசங்கள் கொண்டு செல்லப்பட்டது. சரியாக 10.30 மணி அளவில் கோபுரங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து விமானங்களுக்கும் அபிசேகம் செய்து கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் சுற்றிலும் உள்ள வீடுகளின் மாடிகளிலும், தெருக்களிலும் நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்த்து தரிசித்தார்கள்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, தக்கார் ஆதிமூலம், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.