உள்ளூர் செய்திகள்
வரத்து குறைவு-கோவையில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு
கோவை மீன்மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது.
கோவை:
கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து அதிகளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
உக்கடத்தில் இருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் மீன்களை வாங்கி செல்கின்றனர். பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கி செல்வார்கள். மீன் மார்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வியாபாரிகள், மீன் பிரியர்கள் குவிவது வழக்கம்.
ஆனால் கொரோனா பரவல் கரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமையான இன்று மக்கள் மீன்கள் வாங்க மார்கெட்டில் குவிந்தனர். ஆனால் மீன்களின் வரத்து குறைவால் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.
அதிகபட்சமாக வஞ்சரம் மீன் ரூ.750&க்கு விற் பனையானது. ஊளி மீன் சிறியது ரூ.350&க்கும் பெரியது ரூ.500&-க்கும் விற்கப்பட்டது. அயிலை மீன் ரூ.300, மத்தி ரூ.250, வௌ மீன் சிறியது ரூ. 450 பெரியது ரூ. 600&க்கும் பாறை மீன் ரூ.500, நெத்திலி ரூ.400, பிரான்ஸ் நெத்திலி மீன் ரூ.550&க்கும் விற்பனையானது.
இதனால் வியாபாரிகள் மற்றும் மக்கள் கவலை அடந்தனர். இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த வாரம் மீன் விலை ஒரளவுக்கு கணிசமாக இருந்தது. ஆனால் இன்று வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க குறைந்தளவே சென்றுள்ளனர்.
மேலும் நேற்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நாளை ஊரடங்கு என்பதாலும் மீன்கள் குறைந்தளவே வந்துள்ளது. அதனால் இன்று மீன் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் ஒப்பிடும்போது மக்களின் கூட்டமும் குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.