உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம்

Published On 2022-01-20 08:40 GMT   |   Update On 2022-01-20 08:40 GMT
மானிய விலையில் வேளாண் கருவிகளை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தகவல்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு விவசாயிகளின் வருமானத்தையும், வேளாண் உற்பத்தியையும் அதிகரித்திட வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறது.

வேளாண் எந்திரங்களை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சத வீதம் மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.

வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் மானிய விலையில் பெறுவதற்கு முதலில் தங்கள் செல்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உழவன் ஆப் என்ற உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து இடுபொருள் முன்பதிவு என்பதனை தேர்வு செய்திட வேண்டும்.

அதன் பின்னர் வகை என்பதின் கீழ் பண்ணை எந்திரங்கள் (பொறியியல் துறை) என்பதனை தேர்வு செய்திட வேண்டும். அதன் பின்னர் உழவன் செயலியில் அவரது விண்ணப்பம் பதிவு செய்யப்படும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinry.nic.in  உடன் இணைக்கப்படும்.

வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 14 எண்கள் பவர் டில்லர் (ஆண்கள் -11. பெண்கள்-3) மற்றும் 18 எண்கள் புதர் வெட்டும் கருவி (ஆண்கள் 15, பெண்கள் 3) ஆகிய வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு ரூ.17.30 லட்சம் குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானிய விலையில் கருவிகள் மற்றும் எந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் இதுபற்றிய விவரங்கள் அறிய செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்), வேளாண்மை பொறியியல் துறை, கோணம் அலுவலகத்தையோ அல்லது 04652-260681 என்ற தொடர்பு எண்ணிலோ அணுகலாம்.

மேலும் விவரங்களை மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in மூலம் தெரிந்து கொள்ள லாம். இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான எந்திரங்கள் மற்றும் கருவிகளை பெற்று பயன டையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News