உள்ளூர் செய்திகள்
திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதியில் சாலையோர கடைகளால் பயணிகள் அவதி
மாலை நேரங்களில் அதிக கடைகள் அமைக்கப்படுகிறது. இதனால் பஸ் போக்குவரத்துக்கும், பயணிகள் வந்து செல்வதற்கும் இடையூறாக உள்ளது.
திருப்பூர்:
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள்முடியும் தருவாயில் உள்ள நிலையில் விரைவில் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.
இதனால் சத்தியமங்கலம், பல்லடம், கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும், டவுன் பஸ்களும்பழைய பஸ் நிலையம் முன்பு குறுகிய இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வரிசையாக திருவிழாவில் போடப்பட்டிருப்பது போல சிறு கடைகள் அமைத்து வியாபாரம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் அதிக கடைகள் அமைக்கப்படுகிறது.
இதனால் பஸ் போக்குவரத்துக்கும், பயணிகள் வந்து செல்வதற்கும் இடையூறாக உள்ளது. பயணிகள் செல்லும் சாலையோர பிளாட்பாரத்திலும் கடை விரித்துள்ளனர். இதனால் நடைபாதையில் செல்ல முடியாமல் வயதானவர்கள் தவிக்கிறார்கள்.
மேலும் பழைய பேருந்து நிலையம் தொடங்கி நொய்யல் ஆற்றுப்பாலம் வரை சாலையின் 2 புறங்களிலும் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன.
இதனால் காலை, மாலை நேரங்களில் பயணிகள், நடந்து செல்பவர்கள் சிரமம் அடைகிறார்கள். எனவே இதனை தடுக்க போலீசார்-அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.