உள்ளூர் செய்திகள்
பரமத்தி வேலூரில் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை பாஸ் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் டீ கடையின் மேல் மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் நான்கு ரோடு அருகே பழைய பை-பாஸ் சாலையில் பொன்மலர்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35) பேக்கரி மற்றும் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று வழக்கம் போல் பேக்கரி மற்றும் டீ கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பேக்கரியில் தங்கி வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் தங்கி இருந்த பேக்கரியின் மேல் மாடியில் திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
இதை பார்த்த கடையின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் பேக்கரியின் மேல் மாடியில் தங்கியிருந்த தொழிலாளர்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து மேல்மாடியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.