உள்ளூர் செய்திகள்
கொள்ளை

விழுப்புரத்தில் ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2022-01-18 11:22 GMT   |   Update On 2022-01-18 11:22 GMT
விழுப்புரத்தில் ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). இவர் விழுப்புரத்தில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பரமசிவம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான திருச்சிக்கு சென்று உள்ளார்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு பரமசிவம் தனது குடும்பத்தினருடன் திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு புறப்பட்டார். பின்னர் சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள தனது  வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 41/2 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பரமசிவம் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் தாலுகா போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஜவுளிக்கடை ஊழியர் வீட்டிலிருந்து 41/2 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News