உள்ளூர் செய்திகள்
மணப்பாறை அருகே நள்ளிரவில் குளத்திற்குள் கார் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மாலைமடைப்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 35). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
நேற்று இரவு மணப்பாறைக்கு காரில் சவாரி வந்து விட்டு பின்னர் நள்ளிரவு கள்ளிப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
கீழபூசாரிபட்டி பாப்பான்குளத்தின் கரையில் உள்ள வளைவில் திரும்பும்போது எதிரே வாகனம் வந்ததால் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த கார் 15 அடி பள்ளத்தில் சென்று குளத்தில் பாய்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது.
காரில் மேல் பகுதி மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் ஓட்டுனர் குணசேகரன் அதிஷ்டவசமாக காரை விட்டு வெளியேறி கரைக்கு வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கிரேன் உதவியுடன் குளத்தில் இருந்து காரை மீட்டனர். நள்ளிரவில் கார் குளத்திற்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.