உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அருகே இரவு நேரத்தில் பச்சிளம் குழந்தையை குடிபோதையில் தாக்கிய நரிக்குறவர்
நாகர்கோவில் அருகே இரவு நேரத்தில் பச்சிளம் குழந்தையை குடிபோதையில் நரிக்குறவர் ஒருவர் தாக்கினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில், திங்கள் நகர் பஸ் நிலைய பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்-பெண் நரிக்குறவர்கள் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இரவு 9 மணி அளவில் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்கள் சிலர் 6 மாத ஆண் குழந்தையை அதட்டி கொண்டு இருந்தனர். பின்னர் அதில் குடிபோதையில் இருந்த நபர் குழந்தையை பிடித்து கையில் தூக்கி தரையில் அடிக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் ஓடி வந்து குழந்தையை பிடித்து கொண்டார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த சுமார் 20 பேர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் நரிக்குறவர்களிடம் இதுபற்றி விசாரித்தனர். மேலும் அந்த குழந்தை யாருடையது என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
மேலும் இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் நரிக்குறவர்களிடம் குழந்தை குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது குழந்தையை தாக்கிய நபர் அது தன் மனைவியின் சகோதரியின் குழந்தை என்றும் தாங்கள் அதை வளர்த்து வருவதாகவும் கூறினார். மேலும் அவர் கன்னியாகுமரியில் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து அங்கிருந்த போலீசார், கன்னியாகுமரி போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.