உள்ளூர் செய்திகள்
மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுப்பு - தாராபுரத்தில் காளைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்
காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தாராபுரம்:
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மஞ்சுவிரட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தளவாய்பட்டினம், செலாம்பாளையம், கள்ளிவலசு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
இதில் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் எல்.சி.டி. டி.வி., குளிர்சாதன பெட்டி. சைக்கிள், அண்டா மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விழாக்குழுவின் சார்பில் வழங்கப்பட்டன.
விழா பாதுகாப்பு பணியில் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தநிலையில் இன்றும் மஞ்சுவிரட்டு நடத்தப்பட இருந்தது.
ஆனால் இதற்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.