உள்ளூர் செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் டாஸ்மாக் சூப்பிரவைசர் மர்மமரணம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் டாஸ்மாக் சூப்பிரவைசர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர் வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பிரவைசராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதால், தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் கடையை திறக்க சண்முகம் செல்லவில்லை. இதனால் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் உள்புறமாக தாழிட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது அங்கே சண்முகம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகம் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டாஸ்மாக் சூப்பிரவைசர் சண்முகம் எதனால் இறந்தார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.