உள்ளூர் செய்திகள்
பள்ளிபாளையம் அருகே லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பள்ளிபாளையம் அருகே லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் சமயசங்கிலி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சாய பட்டறைகளும், சலவை ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் இருந்து கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் அங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, நிறம் மாறுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாய பட்டறைக்கு தண்ணீர் கொண்டு சென்ற லாரியை சமயசங்கிலியில் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள் கண்காணிக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிக்காமல் வெளியேற்றினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.