உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-01-07 06:47 GMT   |   Update On 2022-01-07 06:47 GMT
திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள கொட்டப்பட்டியில் இருந்து தினசரி 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் திண்டுக்கல்லுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர பஸ்கள் இயக்கப்படவில்லை.

காலையில் பள்ளி செல்லும் நேரத்தில் பஸ்கள் வராததால் பலர் ஆட்டோக்களிலும், தனியார் பஸ்களிலும் சென்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலையில் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், சரியான நேரத்தில் பஸ் இயக்கப்படாததால் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்தி வருகிறோம். வழக்கமாக இயக்கப்படும் நேரத்தில் பஸ் இயக்கப்பட வேண்டும் என்றனர்.

தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு பஸ்சை விடுவித்தனர். இதனால் அங்கு சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News