உள்ளூர் செய்திகள்
வி‌ஷம்

போலீஸ்காரர் ஏமாற்றியதால் வி‌ஷம் குடித்த இளம்பெண்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2022-01-06 10:25 GMT   |   Update On 2022-01-06 10:25 GMT
போலீஸ்காரர் ஏமாற்றியதால் இளம்பெண் 2-வது முறையாக வி‌ஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் சப்-டிவி‌ஷனுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த வாலிபருக்கு போலீசில் வேலை கிடைத்தது.

இதையடுத்து அவர் பணிக்கு சேர்ந்தார். அதன் பிறகுதான் காதல் விவகாரம் அந்த வாலிபரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதையடுத்து அந்த வாலிபரை நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறினார். அவர் மறுப்பு தெரிவிக்கவே மனமுடைந்த அந்த இளம்பெண் வி‌ஷம் குடித்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வாலிபர் மீண்டும் இளம்பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

தொடர்ந்து இளம்பெண் அந்த வாலிபருடன் பேசி வந்த நிலையில் மீண்டும் காதலில் விரிசல் ஏற்பட்டது. தன்னை வாலிபர் மீண்டும் ஏமாற்றி விட்டதாக கூறி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் மனம் உடைந்த அந்த இளம்பெண் நேற்று திடீரென வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

போலீஸ்காரர் ஏமாற்றியதால் இளம்பெண் 2-வது முறையாக வி‌ஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News