உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு அருகே விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை
பாலக்கோடு அருகே விளை நிலங்களில் புகுந்து காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பேவுஅள்ளி, கரகூர், சொக்கன் கொட்டாய், ஈச்சம்பள்ளம், காடையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த பகுதிகளில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டுயானை நேற்று முன்தினம் இரவு நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மதித்தும் சேதப்படுத்தியது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனவர் செல்வம் தலைமையில் 10 பேர் கொண்ட வனத்துறையினர் விரைந்து சென்று யானையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். தொடர்ந்து அவர்கள் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
காட்டு யானை நடமாடுவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர். பயிர்களை யானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.