உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே இளம்பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
திருவள்ளூர் அருகே இளம்பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி ஜோசப் சின்னி (வயது 27). இவர் கூடப்பாக்கம் பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிப்ட் பொருட்கள் வேண்டும் என அவரிடம் பேச்சு கொடுத்தார். அதை தொடர்ந்து ஜோசப் சின்னி கிப்ட்பொருட்களை காண்பித்தார். அதனை அவர் பேக்கிங் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த நபர் ஜோசப் சின்னி அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து அவர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.