உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி- சேலம் அ.தி.மு.க. பிரமுகர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

Published On 2021-12-30 10:20 GMT   |   Update On 2021-12-30 10:20 GMT
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அ.தி.மு.க. பிரமுகர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). இவர் 2014-ம் ஆண்டு தனது மகனுக்கு கூட்டுறவு பருத்தி சொசைட்டியில் வேலை வாங்கி தருமாறு சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அரியானூர் பழனிச்சாமி என்பவரை அணுகினார்.

அதற்கு அவர் வேலை வாங்கி கொடுப்பதற்காக ரூ.6 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதன்படி வெங்கடேசன் பணம் கொடுத்தார். ரூ.6 லட்சத்தை பெற்றுக்கொண்ட அரியானூர் பழனிசாமி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்டார்.

அதற்கு அவர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி வெங்கடேசன் சேலம் மாவட்ட கலெக்டர் காரமேகத்திடம் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் அரியானூர் பழனிசாமி மீது 420 (மோசடி செய்தல்), 506(2) கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Tags:    

Similar News