சுரண்டை அருகே டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
நெல்லை:
சுரண்டையை அடுத்த வி.கே.புதூர் அருகே உள்ள கலிங்கபட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சரவணன்(வயது 30).
இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார். விவசாயமும் செய்து வருகிறார். சம்பவத்தன்று அவரது டிராக்டரை அப்பகுதியில் உள்ள வயலில் நிறுத்தி இருந்தார்.
மறுநாள் சென்று பார்த்தபோது டிராக்டரில் இருந்த பேட்டரியை காணவில்லை. இதுகுறித்து அவர் வி.கே.புதூர் போலீசில் புகார் அளித்தார்.
அதேநேரத்தில் வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள செம்புலிபட்டினத்தை சேர்ந்த பிரபு(வயது 29) என்பதும், அவர் தான் சரவணன் டிராக்டரில் இருந்து பேட்டரியை திருடியவர் என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிரபு வந்த மோட்டார் சைக்கிளும் பாவூர் சத்திரத்தை சேர்ந்த ஒருவரிடம் திருடியது என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிள் மற்றும் பேட்டரியை பறிமுதல் செய்தனர்.